மதுரவாயல் பகுதியில் வீட்டில் இருந்த பெண் முகத்தில் திராவகம் ஊற்றிய பெண் உட்பட 2 நபர்கள் கைது.

சென்னை, ஆலப்பாக்கம், பெருமாள்கோயில் தெரு, மகாலஷ்மி அவென்யூவில் உள்ள வீட்டில் அஸ்வினி (எ) லேகா, பெ/வ.26 என்பவர் அவரது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 03.45 மணியளவில் அஸ்வினியின் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு அஸ்வினி மற்றும் அவரது தாயார் கதவை திறந்த போது, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என 2 நபர்கள் அஸ்வினியை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்து, தாங்கள் பாட்டிலில் எடுத்து வந்த திராவகத்தை அஸ்வினியின் முகத்தில் வீசி விட்டுச் சென்றனர். இதில் அஸ்வினியின் இடதுபக்க முகத்திலும், அருகில் நின்றிருந்த அவரது தாயாருக்கும் காயம் ஏற்படவே, அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததின் பேரில், சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மேற்படி சம்பவம் குறித்து அஸ்வினி கொடுத்த புகாரின் பேரில், T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

T-4 மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி திராவக வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட 1.ஐஸ்வர்யா, பெ/வ.36, த/பெ.ஶ்ரீராமச்சந்திரமூர்த்தி, மங்களாநகர் 10வது குறுக்குதெரு, போரூர், சென்னை 2.தீனதயாளன், வ/36, த/பெ.சந்திரசேகரன், B பிளாக், திவ்யதர்ஷினி அடுக்குமாடி குடியிருப்பு, விஜயலஷ்மி நகர் 3வது தெரு, நன்மங்கலம், சென்னைஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

விசாரணையில் அஸ்வினி என்பவர் 2வது எதிரி தீனதயாளன் என்பவரை காதலித்து வந்த நிலையில், தீனதயாளனுக்கு திருமணம் ஆனது தெரிந்ததும், அவருடன் பேசாமல் தவிர்த்து வந்ததும், இதனால் ஆத்திரத்தில் இருந்த தீனதயாளனும், தற்போது, அஸ்வினி காதலித்து வரும் பார்த்திபன் என்பவரின் தோழி ஐஸ்வர்யாவும் சேர்ந்து அஸ்வினியிடம் தகராறு செய்து, அவரது முகத்தில் திராவகத்தை வீசிச் சென்றதும் தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின்னர் எதிரிகள் ஐஸ்வர்யா மற்றும் தீனதயாளன் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »