புனிததோமையர் மலைபகுதியில், விற்பனைக்காக Tydol உடல்வலி நிவாரண மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது. 523 டைடல் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 19 ஊசிகள் பறிமுதல்…

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை”  (Drive  against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதின் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, புனிததோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் மதியம் புழுதிவாக்கம், பாலாஜி நகர் 23வது தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்த போது, அங்கு விற்பனைக்காக சட்ட விரோதமாக Tydol உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில், வீட்டில் சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.பிரவீன்குமார், வ/25, த/பெ. தர்மலிங்கம், எண்.161, பாலாஜிநகர், புழுதிவாக்கம், சென்னை 2. மகேஷ், வ/32, த/பெ.சுப்பிரமணி, எண்.5/32, 5-வது பிளாக், கண்ணதாசன் நகர், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 523 டைடல் (Tydol) உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 19 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட பிரவீன்குமார் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் மும்பையிலிருந்து டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »