திருவல்லிக்கேணி பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மகனை தாக்கிய நண்பர்களை தடுக்கச் சென்ற தாயையும் கட்டையால் தாக்கிய 2 நபர்கள் கைது.

சென்னை, திருவல்லிக்கேணி, ஈஸ்வரதாஸ் தெருவில் தினேஷ்குமார், வ/22, த/பெ. பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். தினேஷ்குமார் அவரது நண்பர்கள் கவின்குமார், பிரேம் குமார் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் வீட்டினருகே, திருவல்லிக்கேணி, பழனியம்மன் கோயில் 1வது தெரு, கெனால் தெருவில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், கவின்குமார், பிரேம்குமார் மற்றும் அரவிந்த் ஆகியோர் தினேஷ் குமாரை கை மற்றும் கட்டையால் தாக்கினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த தினேஷ் குமாரின் தாயாரையும் மேற்படி 3 நபர்கள் கட்டையால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த தினேஷ் குமார் மற்றும் அவரது தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 D-6 அண்ணா சதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1.கவின்குமார் (எ) மின்னல், வ/29, த/பெ.கதிரேந்தன், கெனால்தெரு, திருவல்லிக்கேணி, 2.பிரேம்குமார் (எ) பிலிப், வ/28, த/பெ.செல்லபாண்டி, பழனியம்மன் கோயில் 2வது தெரு, மாட்டாங்குப்பம், திருவல்லிக்கேணி ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் எதிரி கவின்குமார் (எ) மின்னல் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 1 கொலை முயற்சி வழக்கு மற்றும் 2அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள அரவிந்த் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »