சிறந்த வேளாண் விஞ்ஞானியாக பேராசிரியர் ஆ சுப்பையா தேர்வு…

உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகமாக திராட்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள திராட்சை ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஆ சுப்பையா இந்த ஆண்டிற்கான வேளாண் துறை விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 16 முதல் 20 வரை  பன்னாட்டு வேளாண் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இக்கருத்தரங்கு கூட்டத்திற்கு இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் களும் ஆராய்ச்சியாளர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். கருத்தரங்கு கூட்டத்தில் பேராசிரியர் சுப்பையா கலந்துகொண்டார்.  கூட்டத்தில் வேளாண்மை துறையில் புதிய புரட்சி ஏற்படுத்தும் வகையில் அனைவரும் அறிக்கைகள் சமர்ப்பித்தார்கள். இந்தப் பன்னாட்டு கருத்தரங்கு கூட்டத்தில் அடுத்த தலைமுறைக்கான தோட்டக்கலைத்துறை 2021 ஆம் ஆண்டு என்ற தலைப்பில் தேனி மாவட்ட திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ஆ சுப்பையா அறிக்கை சமர்ப்பித்து பேசினார்.


அவர் சமர்ப்பித்த அறிக்கையில் திராட்சை மற்றும் விவசாயப் பயிர்கள் எவ்வாறு நவீனப்படுத்தி அதிக மகசூல் எடுப்பது எப்படி? விவசாயிகளை ஊக்குவிப்பது போன்ற கருத்துக்களை நவீன முறைக்கேற்ப அவர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கை சிறந்த அறிக்கையாக தேர்வு செய்யப்பட்டு பேராசிரியர் ஆ சுப்பையா -க்கு நெக்ஸ்ட் ஜென்  ஹார்டி 2021 தோட்டக்கலைத் துறையில் சிறந்த விஞ்ஞானி என்ற விருதினை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்  குமார் வழங்கி சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »