கடந்த 7 நாட்கள் கஞ்சா விற்பனை தொடர்பான சிறப்பு சோதனை மேற்கொண்டு,கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு..

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 25.02.2022 முதல் 03.03.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.28,140/- மதிப்புள்ள 2.814 கிலோ எடை கொண்ட கஞ்சா, 10 நைட்ரோவிட் மாத்திரைகள் மற்றும் ரொக்கம் ரூ.1,400 பறிமுதல்செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக N-2 காசிமேடு காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 25.02.2022 அன்று காசிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 1.சத்யா, வ/35, க/பெ. முருகன், இந்திராநகர், காசிமேடு, சென்னை, 2. எல்லப்பன், வ/24, த/பெ.லால்சிங், எண்.125, அப்பர்சாமி கோயில் தெரு, திருவொற்றியூர், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

P-5 எம்.கே.பி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 27.02.2022 அன்று எம்.கே.பிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 1.தியாகராஜன், வ/40, த/பெ.வேலாயுதம், எண்.82 ஏ, அன்பழகன் தெரு, வியாசர்பாடி, சென்னை, 2.கணேசன், வ/21, த/பெ.சீனிவாசன், எண்.100, எம்.ஆர்,நகர் 2வது தெரு, கொடுங்கையூர், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும்F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 25.02.2022 அன்று எழும்பூர் பகுதியில் கஞ்சா மற்றும் நைட்ரோவிட் மாத்திரைகளை விற்பனை செய்த செல்வா, வ/24, த/பெ.சித்திரைவேல், எண்.12, ஜெயராம் நகர், மேட்டுக்குப்பம், மதுரவாயல் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 நைட்ரோவிட் மாத்திரைகள் மற்றும் 14 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகரகாவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »