திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமனைபட்டா கேட்டு வட்டாட்சியர் மு.முத்துச்சாமி-யிடம் மனு கொடுக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி தலைமை வகித்தார். இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கே.அருள்செல்வன், மார்க்சிஸ்ட்; கம்யூனிஸ்ட் கட்சியின் ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் எஸ்.சிவமணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் டி.முத்துச்சாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் மண்டவாடி – ரோட்டு புதூர் பி.முருகேசன், சி.பி.எம்.கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று குடிமனைபட்டா கேட்டு ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மு.முத்துச்சாமியிடம் மனு கொடுத்தனர். முன்னதாக ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கானோர் குடிமனை பட்டா இல்லாமல் தவித்து வருகின்றனர். மண்டவாடி ஊராட்சியில் பட்டியல் இனத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பொது மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் பட்டா இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு, மாவட்ட நிர்வாகம், வட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிமனை பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் மு.முத்துச்சாமி மனுவின் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்து குடிமனைபட்டா வழங்க ஆவண செய்வதாக தெரிவித்தார்.